Saturday, August 19, 2023

தமிழ் ஒரு செம்மொழி

 தமிழ் ஒரு செம்மொழி

        தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. காலத்தால் மூத்த தமிழ்மொழி தனித்தன்மையின் காரணமாகச் செம்மொழியாகத் திகழ்கிறது.   "தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என்ற பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி என்பார்  பாவாணர்.

செம்மொழித் தகுதிபாடுகள்

    1.தொன்மை, 2. பிறமொழித் தாக்கமின்மை, 3. தாய்மை, 4. தனித்தன்மை, 5.இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, 6. பொதுமைப் பண்பு, 7.நடுவுநிலைமை, 8.பண்பாடு,கலை பட்டறிவு வெளிப்பாடு, 9.உயர்சிந்தனை, 10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு, 11.மொழிக் கோட்பாடு எனப் பதினொரு தகுதிகளை வரையறுத்துள்ளனர்.

1.தொன்மை

    முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்.அவன் பேசிய மொழி தமிழ்மொழி என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக் கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள் அமைத்துத் தமிழர் மொழியை வளர்த்தனர். இந்நிலப்பகுதி கடற்கோளால் அழிந்ததால் தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி 'என்றுமுள தென்தமிழ்' என்பார் கம்பர்.

2. பிறமொழித் தாக்கமின்மை

    காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. பிறமொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

3.தாய்மை

    தமிழ்மொழி திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது. 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும் 180 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ். ஆதலால், உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் திகழ்கிறது தமிழ் என்பது பெருமைக்குரிய ஒன்று.

4.தனித்தன்மை

    இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது தமிழ். தமிழர் வாழ்வை அகம், புறம்  எனப் பகுத்து  வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். உலகில் வேறு எம்மொழியும் பொருளிலக்கணம் கூறவில்லை. இது தமிழின் தனித்தன்மைகளுள் ஒன்று. 

5.இலக்கிய வளம் இலக்கணச் சிறப்பு

    உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350. மாக்சுமுல்லர், தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் பாராட்டியிருக்கின்றார். தமிழ்மொழி இக்கண அமைப்பானது தனிச்சிறப்புடையது. இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம்.

6.பொதுமைப் பண்பு

    தமிழர் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தனர். ஒன்றே குலம் எனப் போற்றினர். தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால் என்றுணர்ந்து வாழ்ந்தனர். செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டனர். இவ்வாறான பொதுமை அறங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவை உலகத்தால் போற்றப்படுகின்றன. திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது. 

7.நடுவுநிலைமை

     சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தது இயற்கையோடு இயைந்தவை. உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துகள் உடையவை. மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துகளை மொழிபவை.

8 பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு

     சங்கப் படைப்புகள் வெறுங்கற்பனைப் படைப்புகளல்ல. அவை மனிதப் பட்டறிவின் முழு வெளிப்பாடுகள். அறத்தொடு நிலையாய் நிற்பன. அவை பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றன.

9.உயர் சிந்தனை

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.  'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அறத்தைத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது. 

10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு 

    தமிழ்ச்சான்றோர் மொழியை இயல், இசை, நாடகம் எனப் பிரித்து வளமடையச் செய்தனர். மேலும் எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.  சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறியை உலகாள்வோருக்கு உணர்த்துகிறது. இந்நூல் கூறும் கலைநுட்பச் செய்திகள் சங்ககாலத் தமிழர்களின் கலை இலக்கியத் தனித்தன்மைகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

11.மொழிக் கோட்பாடு

    தொல்காப்பியர் கூறும் எழுத்துப் பிறப்புமுறைகள் மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்பார் முனைவர் எமனோ. 

    இவ்வாறான சிறப்புகளை உடைய தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட வேண்டும் என்று 1901 ல் தொடங்கி 2004 வரை வலியுறுத்தப்பட்டு வந்தது. 2004 ம் ஆண்டு நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கியது. (12.10 2004) 




No comments:

Post a Comment